பதிவுத்துறையின் பகல் கொள்ளை.. மாண்புமிகுமக்களே விழித்தெழுங்கள்...
"பாட்டிலுக்கு 10 ரூபாய்" என்று எங்கோ கேட்டது போல் தோன்றுகிறதா ? ரசீது இல்லாமல் நடந்த அவலம், அது மிகவும் பழமையான விஷயமாக மாறிப்போய்விட்டது . மாண்புமிகு மக்களே, "பத்திரத்திற்கு 100" ரூபாய் என்று பதிவுத்துறையினரால் ரசீது கொடுத்து அடிக்கும் பகல் கொள்ளை எவ்வளவு பேருக்கு தெரியும். நாம் உறங்கும் வரை இது நடக்கும். மாண்புமிகு மக்களே விழித்தெழுங்கள்.
E Office நடைமுறைக்கு வந்ததோ இல்லையோ, மின்னாளுமை என்ற பெயரில் பதிவு துறை நடத்தும் சட்டத்திற்கு புறம்பாக மாண்புமிகு மக்களிடம் ரசீது கொடுத்து நடத்தும் வசூல் வேட்டை இதோ உங்களது பார்வைக்கு. இன்றைய சூழ்நிலையில் குறுந்தகட்டின் (Compact Disc) பயன்பாடு ஏறக்குறைய கணினி உலகில் இருந்து மறைந்து விட்டது . காலத்திற்கு ஒவ்வாத பொதுமக்களால் பயன்படுத்த முடியாத ஒரு குறுந்தகட்டின் பெயரில் பதிவுத்துறை நடத்தும் பகல்கொள்ளை. சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்படும் ஒவ்வொரு பத்திரத்திற்கும் குறுந்தகடு கட்டணம் என்ற பெயரில் 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நாம் யாரும் கவலைப்படுவதில்லை. காரணம், அதற்கு மேல் ரசீது இல்லாமலேயே பல மடங்கு தொகையை அலுவலகத்தில் நம்மிடம் இருந்து கறந்துவிடுவதனால், இந்த சிறிய தொகை பற்றி நாம் யாரும் கவலைப்படுவதில்லை. கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் TCS நிறுவனத்திடமிருந்து குறுந்தகடு சப்ளை செய்யப்படவில்லை என்ற காரணத்தை காட்டி, குறுந்தகடுகளும் மக்களுக்கு வழங்கப்படுவது இல்லை. ஆனால் கறாராக அந்த தொகையை ரசீது கொடுத்து வசூல் செய்யும் பதிவுத்துறையின் பகல்கொள்ளை குறித்து நாம் என்றாவது யோசித்துள்ளோமா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு அலுவலகத்தில் இவ்வளவு தொகை எனில் தமிழகம் முழுவதும் எவ்வளவு தொகை சட்டத்திற்கு புறம்பாக வசூலிக்கப்படுகிறது என்பது உங்கள் முடிவிற்கே.. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில் மாண்புமிகு மக்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.