மாண்புமிகு மக்களின் பலம் என்ன என்பதை உணர்ந்த அரசு எந்திரம்...
நண்பர்களே, மின்னஞ்சல் கொள்கை, இணைய பாதுகாப்பு கொள்கை என்று கொள்கைகளுக்கு பஞ்சம் இல்லாமல் அரசு பொது வெளியில் மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. ஆனால் இந்த அரசு எந்திரம் இதை செயல்படுத்துகிறதா என்றால் இல்லை. உதாரணமாக வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் , துரிதமாகவும் அரசு செயல்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக E Office என்ற மென்பொருளை 2019 ஆம் ஆண்டிலேயே, தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கோப்பு நகர்வுகள் கணினி வழியாகவே செயல்படுத்தப்படவேண்டும். அரசு அலுவலர்கள் அரசு அலுவலகங்களில் இருக்கையில் அமராமலேயே, எந்த இடத்தில் இருந்தும் கோப்பை பார்வையிடவும், முடிவு எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டது. இதற்கு அடிப்படை ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மின்னஞ்சல் TNeGA எனப்படும் தமிழக மின்னாளுமை முகாமையால் வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் இருந்தால்மட்டுமே, அந்த அரசு ஊழியர் இந்த E Office மென்பொருளுக்குள் நுழைந்து அவரது பணியை செய்யமுடியும். இந்த E Office மற்றும் பிரத்தியேகமான மின்னஞ்சல்களை வழங்குவதற்காகவே அரசு கோடிக்கணக்கில் நிதியை ஒதுக்கி செலவு செய்துள்ளது.
இருப்பினும், இந்த அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கியுள்ள அந்த மின்னஞ்சல் முகவரிகளை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க தயாராக இல்லை. ஒவ்வொரு அரசுத்துறை அலுவலகம் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் GMail மற்றும் Yahoo போன்ற தனியார் மின்னஞ்சல் முகவரிகள் மட்டுமே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த குறையை சரிசெய்யக்கோரி மாண்புமிகு மக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைய தளங்களில் இருந்த தனியார் மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டிருப்பது மாண்புமிகு மக்கள் குழுவிற்கு கிடைத்த வெற்றி.
இது முடிவல்ல. நீக்கப்பட்ட தனியார் மின்னஞ்சல் முகவரிகளை பதிலாக TNeGA வழங்கிய அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை பதிவேற்றம் செய்யக்கோரி நூற்றுக்கணக்கான மனுக்கள் மாண்புமிகு மக்களிடம் இருந்து சென்று கொண்டுள்ளது.
இந்த அமைதி புரட்சியில் பங்கேற்க உங்களையும் அளிக்கிறது மாண்புமிகுமக்கள் குழு.