ஒரு அரசு அலுவலகம் நினைத்தால் தவறு செய்யலாம்.. தவறை மறைக்கலாம். பொதுமக்களை அலைக்கழிக்கலாம். அனால், பொறுமையாக செயல்பட்டால் தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்தலாம். தேவை பொறுமை, விடாமுயற்சி மாண்புமிகு மக்களை ஒருங்கிணைப்பது.
ஒரு கிராம நிர்வாக அலுவலர் , வட்டாட்சியரின் உதவியுடன் ஒரு போலியான வாரிசு சான்றிதழை வழங்குகிறார். அந்த வாரிசு சான்றிதழின் அடிப்படையில் அதே பெயர் கொண்ட அடுத்தவர் நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் பட்டா மாற்றம் செய்து கொடுக்கிறார். அந்த பட்டாவின் அடிப்படையில் அந்த நபர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வேறொரு நபருக்கு பத்திர பதிவும் செய்து விடுகிறார்.
பாதிக்கப்பட்ட நபர்கள் வட்டாட்சியரிடம் சென்று நடந்த முறைகேட்டை சரிசெய்து தர கோருகின்றனர். அவர் தவறை திருத்திக்கொள்ள தயாராக இல்லை. பாதிக்கப்பட்ட நபர்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தை கையில் எடுக்கின்றனர். தகவல்கள் மறுக்கப்படுகிறது. பிரிவு 2(j)ன் கீழ் கள ஆய்வு மேற்கொள்கிறார். கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சார் ஆட்சியரிடம் முறையிடுகின்றனர். ஒன்றும் நடக்கவில்லை. அங்கும் மனுக்களின்மீதான நடவடிக்கை குறித்து RTI மனுக்கள் குவிகிறது. பதில் இல்லை. மேல்முறையீடு மற்றும் புகார் ஆணையத்திற்கு செல்கிறது. ஆணையத்தில் இருந்து கடிதம் வந்த பின்பு சார் ஆட்சியர் அலுவலகம் வேலை செய்கிறது. முறையான விசாரணை நடைபெற்று போலியாக வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழ் றது செய்யப்படுகிறது. அதனடிப்படையில் பட்டா மறுத்தாலும் ரத்து செய்யப்படுகிறது.மனுதாரர் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் மோசடி செய்தவர்கள் மீது குற்ற வழக்கு பதிய வலியுறுத்துகிறார். இங்கும் தயக்கம். மேலும் RTI மனுக்கள். வேறுவழியின்றி குற்ற வழக்கு பதியக்கோரி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு கடிதம் செல்கிறது. அங்கும் தயக்கம். வழக்கு பதிவு செய்ய மறுத்த காவல் துணை கண்காணிப்பாளர் மீது குற்ற வழக்கு பதிய அனுமதி கோரி உள்துறை செயலருக்கும் , காவல் துறை தலைவர் அவர்களுக்கும் கடிதம் செல்கிறது. FIR ஐ வந்து பெற்றுச்செல்லும்படி காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வருகிறது. FIR ல், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர், சார் பதிவாளர், பதிவு எழுத்தர் மற்றும் இந்த குற்ற செயலுக்கு மூலகாரணமாக மோசடி நபர்கள் ஆகியோர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ள FIR இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆறு மாதங்கள் கடந்தும், FIR மீது விசாரணை நடத்தி குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. தவறு செய்த அரசு அலுவலர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று சற்று யோசித்து பாருங்கள். என்றோ ஒரு நாள் இந்த குற்றவழக்கில் உள்ள நபர்கள் பதில் சொல்லியாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது ஏதோ ஒரு நிகழ்வல்ல. தமிழகத்தில் பல இடங்களில் இது சகஜம். . இதுதான் இன்றைய எதார்த்தநிலை. அனால், கையூட்டு என்ற ஒரு விஷயத்தில் மேற்கண்ட அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகின்றனர். ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்க விரும்புவதில்லை. மேலும் இதுபோன்ற நியாயத்திற்காக போராடுபவர்களுக்கு எப்படிப்பட்ட சவால்கள் வருகிறது என்பது அடுத்த கதையில் தொடரும். மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் ஒரு நாள் நிலைமை மாறும். நம்பிக்கையுடன் பயணிப்போம்.
உண்மையை உறக்கச்சொல்வோம். . …மாண்புமிகுமக்கள்…..