தற்போதைய சூழலில் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற முனைப்பு ஏனையோர் மனதில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனூடே முதலில் தனது குடும்பம், குழந்தைகள், வாழ்க்கை முக்கியம் என்பதனையும் தாண்டி பாதுகாப்பு என்பதே பிரதானமாக உள்ளது. காரணம் சமூக நோக்கில் செயல்படும் ஆர்வலர்களின்மீது ஊழல்செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களால் அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும், பொய்யான வழக்குகள் புனையப்பட்டு சிறைவாசம் என பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதன்மூலம் தங்களது குடும்பமும், குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்படுவதையும், அதன்மூலம் ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் எண்ணியே சிலர் சமூகம் சார்ந்த சில முன்னெடுப்புகளுக்கு முன்வருவதில்லை.
இந்நிலையில், நமது இயக்கமானது அத்தகைய தாக்குதல்களிலிருந்து அனைத்து சமூக ஆர்வலர்களையும் பாதுகாப்பது என்பது சற்று சவாலானதுதான். எனவே, சமூகத்தில் மாற்றம் நிகழ்த்த வேண்டும் என்கிற முனைப்போடு சீரிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் நம் இயக்கமானது முன்னெடுப்புகள் சம்மந்தமான பயிற்சியினூடே நமது இயக்கம் சார்ந்த ஆர்வலர்களை தற்காத்துக் கொள்வதற்கு ஏதுவாக பொய்யான வழக்கிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்குண்டான வழிமுறைகளையும், அத்தகைய சூழலில் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்த உரிய பயிற்சியினையும் வழங்கிட வேண்டும். குறிப்பாக தன்வழக்கில் தானே ஆஜராகி வாதாடுவதற்கான பயிற்சியினையும் வழங்கிட வேண்டும் எனவும் அனைத்து நிலை ஒருங்கிணைப்பாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
அ.வெங்கடேசன்,
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
தன்னார்வலர் எண்.TN-2026-0009